அகமதாபாத்: குஜராத் மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 63.30% வாக்குகள் பதிவாகின. 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் அமைக்கப்பட்ட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். பிரதமர் மோடி வாக்களிக்க வருகை தந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிரதமரைக் காண அங்கு பெருமளவில் மக்களும் திரண்டு நின்று இருந்தனர். வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்தப்பின் பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; குஜராத் மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலம் சட்டமன்ற தேர்தலை திருவிழா போல் சிறப்பித்து வருகிறது. ஜனநாயக கடமையாற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றி. தேர்தலை அமைதியாக நடத்தி வரும் தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறேன். அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் இவ்வாறு கூறினார்.