அடையாறு ஆற்றுக்கு அடியில் ஜன.15ல் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி: அதிகாரிகள் தகவல்

சென்னை: அடையாறு ஆற்றுக்கடியில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரி மாதம் 15ம் தேதி தொடங்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2வது கட்டமாக ரூ.61,843 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையில் முதல் கட்டத்தை தொடர்ந்து தற்போது போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. வரை 3வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. வரை 4வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்திற்கு 5வது வழிப்பாதை உட்பட 3 வழிப்பாதைகளில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பசுமை வழிச்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ள பகுதியில் சுரங்க ரயில் நிலையத்துக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. அதே போல் அடையாறு ஆற்றில் 6 மீட்டர் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் மிதவை படகில் எந்திரங்கள் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண்பரிசோதனை செய்யும் பணியும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் பசுமை வழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ள நிலையில் இதற்காக 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை பொருத்தும் பணி முடிவடைந்த நிலையில் ஜனவரி 15ம் தேதி சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: