மின் இணைப்பு எண்ணுடன் ஒரே வாரத்தில் 50 லட்சம் பேர் ஆதார் எண் இணைத்தனர்: மின்வாரியம் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஒரே வாரத்தில் 50 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கட்டுள்ளது.

அதன்படி, கடந்த மாதம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுந்தகவல் அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்துபவர்கள், ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதனிடையே, ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது. குறிப்பாக 100 யூனிட் இலவச மின் திட்டம் நிறுத்தப்படுமா, மின் கட்டணம் செலுத்த முடியாமல் போகுமா என மின்நுகர்வோர் குழப்ப நிலையில் இருந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மின் கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, கடந்த மாதம் 28ம் தேதி தமிழகம் முழுவதும் 2,811 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. இதில், பொதுமக்கள்  நேரடியாக வந்து ஆதாரை இணைத்து கொள்ளலாம் என மின்துறை அறிவித்தது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதாரை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அந்தந்த மின் கட்டண அலுவலகங்களில் விழிப்புணர்வு பாதாகைகள் வைக்கப்பட்டன. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைக்காமல் எளிதில் ஆதாரை இணைக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டன. அதேபோல், செல்போன் மற்றும் கணினி வாயிலாக ஆன்லைன் மூலம் பலர் ஆதாரை இணைத்தனர்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் மின் இணைப்பு பெற்றுள்ள 2.37 கோடி மின்நுகர்வோரில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஒரே வாரத்தில் இணைத்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விடுமுறை தினமான (ஞாயிற்றுகிழமை) நேற்று சிறப்பு முகாம்கள் செயல்பட்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் ஆதாரை இணைக்க வந்த வண்ணம் இருந்தனர்.

Related Stories: