கண்ணூர் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது கடலில் தத்தளித்த 13 மீனவர்கள் மீட்பு

திருவனந்தபுரம்: கொச்சியிலிருந்து 7 தமிழக மீனவர்கள் உள்பட 13 பேருடன் மீன்பிடிக்கச் சென்ற படகு கண்ணூர்  அருகே நடுக்கடலில் கவிழ்ந்தது. இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.கொச்சி  முனம்பத்திலிருந்து ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஷைஜா என்ற படகில் கடந்த 20  நாட்களுக்கு முன் 13 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக புறப்பட்டு சென்றனர்.  இவர்களில் 7 பேர் குமரி மற்றும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.  5  பேர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.  

நேற்றுமுன்தினம் மாலை படகில் ஏற்பட்ட ஒரு துளை  மூலம் கடல் நீர் உள்ளே புகத்தொடங்கியது. சிறிது நேரத்திலேயே படகு முற்றிலுமாக  கவிழ்ந்தது. இதையடுத்து மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் குதித்தனர்.  இதுகுறித்து ஹாம் ரேடியோ மூலம் காசர்கோடு பேக்கல் கடலோர போலீசுக்கு தகவல்  கொடுக்கப்பட்டது. பேக்கல் போலீசார் கண்ணூர் அழிக்கோடு கடலோர போலீசுக்கு  தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் படகில் விரைந்து சென்று கடலில் தத்தளித்துக்  கொண்டிருந்த 13 மீனவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

Related Stories: