சேறு, சகதிகளால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்; குந்தா, கெத்தை அணைகளை தூர்வார கோரிக்கை

மஞ்சூர்: குந்தா, கெத்தை அணைகளில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின் நிலையங்களில் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் குந்தா நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர் மின்உற்பத்திக்குபின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அனைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.

பின்னர் ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சார உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கெத்தை மின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்கபாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதனால் குந்தா, கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக குந்தா மற்றும் கெத்தை அணைகள் உள்ளது. இந்நிலையில் குந்தா, கெத்தை அணைகளை தூர்வாராததால் சேறு மற்றும் சகதிகள் நிறைந்துள்ளது. மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் செடி, கொடி, மரங்கள் அடித்து செல்லப்பட்டு அணைகளில் சேர்கிறது. இதனால்அணைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளது. குறைந்தபட்ச மழை பெய்தாலே அணைகள் நிரம்பி விடுகிறது. மேலும் சேறு, சகதிகளால் குந்தா அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பால் கெத்தை மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து குந்தா மற்றும் கெத்தை அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும்  கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Stories: