விவசாயநிலங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளை தாக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்; வனத்துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம்: தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுத்தை, கரடி, காட்டு யானை, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வர துவங்கி விட்டன. தேனி மாட்டத்தில், பெரியகுளம், தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியகுளம், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது சிறுத்தை, காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது. எனவே வனத்துறையினர் தலையிட்டு வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மூணாறில் காட்டு யானை அட்டகாசம் ேகரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால், பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில் காட்டுயானையின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. மூணாறு அருகே பூப்பாறையை அடுத்த பெரியகானல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிகிறது. இந்த யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது. அதுபோல், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை பகுதிகளில் நெல்லி, மா, சப்போட்டா, தென்னை, வாழை விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் அவ்வப்போது, காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பண்ணைப்புரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதுமட்டுமின்றி, தண்ணீருக்கு பயன்படுத்தப்படும் பைப், மோட்டார் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக சேதப்படுத்தி செல்கின்றது.

உணவு தேடி வரும் கரடிகள் கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி, கன்னிமார்ஊத்து ஓடை பகுதி, வருசநாடு ஊராட்சிக்குட்பட்ட மொட்டப்பாறை சாலைகளில் கரடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர், இதேபோல் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சீலமுத்தையாபுரம், மேல்வாலிப்பாறை, முத்துராஜபுரம், முத்துநகர், மற்றும் மேகமலை ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர், குழிக்காடு, நொச்சிஓடை, அரசரடி, வெள்ளிமலை, மஞ்சனூத்து, பொம்மராஜபுரம், போன்ற மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் விட்டில், ஈசல், பூச்சிகள் அதிகரித்துள்ளன. இவற்றை உணவாக தின்பதற்காக கரடிகள் அதிகம் வருகின்றன. எனவே, வனத்துறையினர் பொதுவெளியில் சுற்றித்திரயும் கரடிகளை வனப்பகுதிக்குள் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில்,  பகல்நேரத்திலேயே சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். புலி, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக உள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தை, கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும், என்றனர்.

Related Stories: