கடன் பெற ரூ.5 லட்சம் கொடுத்து ஏமாந்ததால் விரக்தி பெயின்ட் கடை உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை: காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பற்றி திடுக் கடிதம்

விருதுநகர்: விருதுநகரில் கடன் பெறுவதற்காக ரூ.5 லட்சம் முன்பணம் கொடுத்து ஏமாந்த பெயின்ட் கடை உரிமையாளர், மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர், எஸ்விபிஎன்எஸ் தெருவை சேர்ந்தவர் கார்த்திகை ராஜா(41). பெயின்ட் கடை உரிமையாளர். மனைவி அருணா மகஸ்ரீ(37). மகள்கள் அக்சயாஸ்ரீ(18) சென்னையில் பிளஸ் 2வும், மேகாஸ்ரீ(12) விருதுநகர் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மேகாஸ்ரீ அருகில் உள்ள பாட்டி வீட்டில் இரவில் தங்குவார். நேற்று முன்தினம் இரவு தங்கிய அவர், நேற்று காலை பள்ளி செல்வதற்காக புத்தகங்களை எடுக்க வீட்டிற்கு வந்துள்ளார்.

வெகுநேரம் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது பெற்றோர் இருவரும் வீட்டிற்குள் பிணமாக கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்து விருதுநகர் மேற்கு போலீசார் வந்து கதவை உடைத்து, தம்பதியின் சடலங்களை கைப்பற்றினர். பரிசோதனையில் அவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்தது தெரியவந்தது. வீட்டில் அருணா மகஸ்ரீ, தனது தாய், மகள்கள், உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு எழுதியிருந்த 11 பக்க கடிதங்கள், செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

போலீசாருக்கு எழுதிய கடிதத்தில் நாங்கள் தற்கொலை செய்வதற்கு முத்து மகாராஜா என்பவர் தான் முழு காரணம். எங்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் முன்பணம் வாங்கியிருந்தார். அதற்கான ஆதாரங்கள் எனது வாட்ஸ் அப்பில் உள்ளது. ஆனால் கடன் தொகை பெற்றுத்தரவில்லை. இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் தகராறு காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டது. அவரிடம் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் உள்ளது. எங்கள் இறப்பிற்கு பிறகு யாரும் அவரால் ஏமாற்றப்படக்கூடாது. காஞ்சிபுரத்தில் முத்து மகாராஜா இருக்கிறார். ஆனால் அவரின் ஆதார் முகவரியில் தேனி மாவட்டம், சின்னமனூர் என உள்ளது என எழுதியிருப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: