ரூ.4000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு சுரானா நிறுவன பங்குதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாலாயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் போலி நிறுவன பங்குதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை  ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்தும் 4000 கோடி ரூபாய் கடனை பெற்றன. அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என்று வங்கி சார்பில் புகார்  தரப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, நிறுவன பங்குதாரரான ஆனந்த்  உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும்  கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 4  பேரும் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் இந்த வழக்கில் தவறாக கைது  செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் இந்த முறைகேட்டுக்கும் தொடர்பில்லை. சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வாதிட்டார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், சுரானா நிறுவனங்கள் மோசடி செய்த தொகை ரூ.3986.08 கோடி. முக்கிய குற்றவாளிகளுடன் மனுதாரருக்கு அதிக தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்கு ஜாமீன் கொடுத்தால்  சாட்சிகளை கலைத்து விடுவார் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடன்  வாங்குவதற்காக சுரானா நிறுவனம் பல பொய் தகவல்களை வங்கிகளிடம் தந்துள்ளது. சுரானா நிறுவனங்களில் 10 நிறுவனங்களுக்கு மனுதாரர் பினாமியாக செயல்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அமலாக்கதுறை தரப்பு வாதிட்டுள்ளது. அதிகம் படிக்கவில்லை எனக்கூறும்  மனுதாரர், பத்து போலி நிறுவனங்களுக்கு உரிமையாளராகவும், பங்குதாரராகவும் இருந்துள்ளார். பண பரிவர்த்தனையில் கையெழுத்து போட்டுள்ளார். மனுதாரர் பிரதான குற்றவாளியான தினேஷ் சந்த் சுரானாவுக்கு டம்மியாக செயல்பட்டுள்ளதாக சாட்சி ஆவணங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் அவர் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. எனவே, அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: