சென்னை: தமிழகம் முழுவதும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் அடையாளமாக கொடியேற்றும் நிகழ்ச்சி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கொடுங்கையூர், கொளத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பின் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அளித்த பேட்டி: தமிழ் வளர்ச்சிக்கு பாஜ முக்கியத்துவம் தருவது போல் படம் காட்டுகிறது. ஆனால் அமித்ஷாவின் கல்விக் கொள்கையில் முக்கிய தேர்வுகளை இந்தியில் தான் எழுத வேண்டும் என்று இருக்கிறது. காசியில் அவர்கள் நடத்துவதாக கூறும் தமிழ் சங்கமத்தில் உண்மையான தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டதாக தெரியவில்லை. பாஜவினர் அரசியல் செய்வதற்காக இதனை கையில் எடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டு முதல்வரை அழைத்து இருக்க வேண்டும். தமிழ் அறிஞர்களை அழைத்து இருக்க வேண்டும். இவர்களை எல்லாம் தவிர்த்துவிட்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர். இது பாஜவின் மறைமுக செயல் திட்டம் என்றார்.