கொரோனா பணியில் தொற்று பாதித்து உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் ஏ.கே.விவேகானந்தன் கடந்த 2020 நவம்பர் 22 அன்று பணியில் இருந்த போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். இந்நிலையில், அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி வி.ஆர்.திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் ரூ.25 லட்சம் நிவாரணம் கோரி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பதிலளிக்க அரசு தரப்பில் மீண்டும் அவகாசம் கோரப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நந்தகுமார், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவரான விவேகானந்தன் இறந்து 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுநாள் வரை அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 25 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. பொறியியல் பட்டதாரியான அவருடைய மனைவி 2 குழந்தைகளுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருகிறார் என்பதால் அவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி விண்ணப்பித்தும் அதற்கும் பதில் இல்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு ஆணை 18ன் கீழ் வழங்கப்படும் கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பில், திவ்யாவிற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories: