பெரம்பூர்: சலூன் கடையில் ஊழியர்களை தாக்கி பணம் பறித்த பாக்சர் கைது செய்யப்பட்டார். சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சலூன் கடை நடத்துபவர் சத்தியபாலன். இவரது கடைக்கு கடந்த 25ம்தேதி புளியந்தோப்பு டோபிகானா பகுதியை சேர்ந்த பாக்சர் பிரசாந்த் என்பவர் வந்துள்ளார். பின்னர் அவர் கடையில் இருந்த ஊழியர்களிடம், ‘’கடை முதலாளி எங்கே’’ என்று கேட்டதுடன் அங்கிருந்த பணியாட்களை தகாதவார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. அத்துடன் பணம் கேட்டு ஊழியர்களை சரமாரியாக தாக்கிவிட்டு மாதந்தோறும் கண்டிப்பாக மாமூல் தரவேண்டும் என்று கூறிவிட்டு பிரசாந்த் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.