மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் மூடும் நிலையில் இருந்து மாறி விருதுக்கு தேர்வான அரசு பள்ளி: பெற்றோர் ஆசிரியர்கள் மகிழ்ச்சி

நாமக்கல்: தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை ஆண்டுதோறும், மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பெரியாகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,  பள்ளிபாளையம் ஒன்றியம் எலந்தக்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கொல்லிமலை ஒன்றியம் சூளவந்திபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு, தமிழக அரசு சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதினை இன்று வழங்குகிறது.

இந்த விருதினை பெற, பள்ளியின் தலைமை ஆசிரியைகள் அருக்காணி, கவிதா, பூங்கொடி, நாமக்கல் வட்டார கல்வி அலுவலர் சந்திரவதனா மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் சென்னை புறப்பட்டுச் சென்றுள்ளனர். பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள், பள்ளியின் நடைபெறும் கல்வி இணை செயல்பாடுகள், குழந்தைகளின் மைய சூழலுக்கு முக்கியத்துவம் அளித்தல், குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், தனித்திறன், கற்றல் அடைவு திறன், கழிப்பறை வசதிகள், கற்றல் கற்பித்தலில் மேற்கொள்ளப்படும் புதிய உத்திகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து, சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், மூத்த தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த 3 பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாமக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குக்கிராமமான பெரியாகவுண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் போதுமான மாணவர்கள் இல்லாததால், கடந்த 2017ம் ஆண்டு பள்ளியை மூடி விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. காரணம் அப்போது இந்த பள்ளியில் 4 குழந்தைகள் மட்டுமே படித்து வந்தனர்.

அந்த சமயத்தில் இந்த பள்ளிக்கு  மாறுதலில் வந்த தலைமை ஆசிரியை அருக்காணி மற்றும் இடைநிலை ஆசிரியை என இருவரும் இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கு வித்திட்டனர். வீடு, வீடாக சென்று பெற்றோரை சந்தித்து, குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும்படி அழைத்தனர். பெரியாகவுண்டம்பாளையம் கிராமத்தில் இருந்து நாமக்கல்லில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வந்த பெற்றோர்கள், 2 ஆசிரியைகளும் வீடு தேடி வந்து குழந்தைகளை அழைத்ததால், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 4 ஆண்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்த பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகரித்தது. தற்போது, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் 35 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மேலும்இ அந்த ஊரில் அனைத்து குழந்தைகளும், இந்த பள்ளிக்கு வரும் நிலை தற்போது உருவாகியுள்ளது.  சிறந்த கல்வி சூழல், ஆசிரியைகள் இருவரும் தனித்தன்மையுடன் கற்பித்தல் திறனை அதிகப்படுத்தியுள்ளனர். இதனால், மாணவ- மாணவியரின் கற்பித்தல் திறனும் அதிகரித்துள்து. மேலும், அருகில் உள்ள திண்டமங்கலம் பகுதியில் இருந்தும், பெரியாகவுண்டம்பாளையம் அரசு பள்ளிக்கு குழந்தைகள் படிக்க வருகின்றனர். அரசு பள்ளிகளுக்கு விருது கிடைத்துள்ததால், அந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: