ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கைது..!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். பெருந்துறை அருகே பாலக்கரை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பாலக்கரை, கூலிக்காட்டு வலசு, இந்திராநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அந்த பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.  

இந்நிலையில், பட்டியலின மாணவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கீதாராணி கழிவறைகளை சுத்தப்படுத்த வைத்ததாக புகார் எழுந்தது. கிருமி நாசினியை வெறும் கையால் பயன்படுத்திய போது மாணவர்களின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பெற்றோர் விசாரித்த போது சிறுவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் கொடுமை தொடர்ந்ததால் பெற்றோரும், சமூகநல ஆர்வலர்களும் காவல்துறையிலும், குழந்தைகள் நல அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.

பின்னர், பள்ளியை முற்றுகையிட்ட அவர்கள் தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, பெற்றோரின் புகாரையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து கீதாராணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அறிந்ததும் தலைமறைவான அவர் இரவு வீடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.

கீதாராணி தனக்கு தேவையான பொருட்கள் சிலவற்றை எடுக்க வீட்டிற்கு வந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், இன்று காலை பெருந்துறை காவல் நிலையத்திற்கு கீதாராணியை அழைத்து சென்ற போலீசார் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இவர் மீது எஸ்.சி., எஸ்.டி.,வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: