மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்கி தடையற்ற சூழலை அமைத்து நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் நாள் ‘அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்’உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் அமைந்துள்ளது. அந்த வகையில், இந்த தினத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டும், மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களின் திறனுக்கேற்ற தொழிற்பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளால் செய்யப்படும் கைவினை பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும். தன்னிச்சையாக பிறரை சாராமல் வாழ்வதற்கு பயன்பெறும் நவீன உதவி உபகரணங்கள் பற்றி விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தினம் மாநிலம் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகிறது. எனவே, இத்தினத்தில் நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கி அவர்களுக்கான தடையற்ற சூழலை அமைத்து, நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: