புழல்: புழல் மத்திய சிறையில், நேற்று முன்தினம் இரவு தண்டனை பிரிவில் காவலர்களின் சோதனையின்போது, கைதி ஒருவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம் கார்டு, பேட்டரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை புழல் மத்திய சிறையில், தண்டனை பிரிவில் 900க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கைதிகளை சிறைக்குள் அடைக்கப்பட்டனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு சிறைக் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கழிவறை ஓரத்தில் ஒரு கைதி சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். அவரை சிறை காவலர் பரிசோதித்ததில், அவரின் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம் கார்டு, பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.