மழைக்காலத்திற்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது: கரடியின் கால்தடம் பதிவு

சத்தியமங்கலம்: புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங்குகள் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணி இன்று  தொடங்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி  உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மழைக்காலத்திற்கு முன், மழைக்காலத்திற்குப்பின் என 2 முறை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி மழைக்காலத்திற்கு பிந்தைய கணக்கெடுப்பு இன்று  தொடங்கி டிசம்பர் 7ம் தேதி வரை 6 நாட்களுக்கு நடக்கிறது.

 சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர், விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி,  ஜீரஹள்ளி வனச்சரகங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், 5 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவினரும் தனித்தனியாக வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளின்  கால்தடம் மற்றும் எச்சத்தை அளவீடு செய்தும், எச்சத்தை சுற்றி ஒரு மீட்டர் சுற்றளவிற்கு புற்கள் உள்ளனவா எனவும்,  எச்சத்தை வெயில்படும் இடங்கள், நிழல்பகுதி, நீர்நிலை உள்ள பகுதி மற்றும் மேட்டுப்பாங்கான பகுதிகளில் இடுகின்றனவா எனவும், எச்சங்கள் மறைய ஆகும் காலஅளவு குறித்தும், ஜிபிஎஸ் கருவி, வியூபைண்டர், காம்பஸ் உதவியுடன் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று பவானிசாகர் வனப்பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் கரடியின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.  இதில் 3 நாட்களுக்கு பகுதிவாரி கணக்கெடுப்பும், 3 நாட்களுக்கு நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பும் நடைபெறுவதாகவும், ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருவதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: