நெல்லை: பாஜ ஆட்சியின் 8 ஆண்டுகளில் ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட உருவாக்கப்படவில்லை என நெல்லையில் நேற்று துவங்கிய ஏஐடியுசி 20வது மாநில மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார். ஏஐடியுசி 20வது மாநில மாநாடு நெல்லை கொக்கிரகுளம் ரோஸ் மகாலில் நேற்று துவங்கியது. இந்த மாநாடு நாளை (3ம் தேதி) வரை தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. மாநாட்டிற்கு சுப்பராயன் எம்பி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது: ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டத்திற்கு மாறாக தொழிலாளர்களுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறது. மோடி ஆட்சியில் தற்போது பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டு கால பாஜ ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட உருவாக்கப்படவில்லை. மாறாக பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், மாணவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து கடந்த 26ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டோம். கவர்னரிடம் நேரடியாகச் சென்று மனு கொடுத்தோம். ஆனால் அவர், வாங்க மறுத்து விட்டார்.
ஒன்றிய அரசின் ஆட்சியில் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்கப்படும். கருப்பு பணம் மீட்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. மதங்களை காட்டி மக்களிடையே பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அரசு ஆர்எஸ்எஸ்சின் கரம் என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.