புதுடெல்லி: மின்சார திருத்த சட்ட மசோதாவில் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக இருக்கும் 12 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எரிசக்திக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் நாமக்கல் திமுக எம்பியும், எரிசக்திக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கலந்து கொண்டார். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில்,‘‘மின்சார திருத்த சட்ட மசோதாவால் தமிழக மின்சார வாரியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. மேலும் எதிர்காலத்தில் இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால் தற்போது விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர வேண்டும்.