திருமலை: தெலங்கானாவில் புகழ்பெற்ற உஸ்மானியா அரசு மருத்துவமனையில் 2 திருநங்கைகள் மருத்துவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் திருநங்கைகளுக்காக ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதன்படி, ‘2014-ல் உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்தநிலையில், தெலங்கானாவில் புகழ் பெற்ற அரசு உஸ்மானியா மருத்துவமனையில் 2 திருநங்கைகள் டாக்டர்களான நியமிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ரூத் ஜான் பால் கொய்யாலா. மல்லாரெட்டி மருத்துவ அறிவியல் கழகத்தில் எம்பிபிஎஸ் படித்தார். இவர், உஸ்மானியா அரசு பொது மருத்துவமனையில் டாக்டராக நியமிக்கப்பட்டார். அவர் கூறும்போது, ‘‘2018ல் மருத்துவக் கல்வியை முடித்து 15 மருத்துவமனைகளுக்கு வேலைக்குச் சென்றும் நிராகரிக்கப்பட்டேன். இதற்கான காரணம் சொல்லாவிட்டாலும், எனக்குப் புரிகிறது’’ என்றார்.
இதேபோல், மற்றொரு டாக்டராக பிராச்சி ரத்தோர் என்ற திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான இவர், அதிலாபாத் ரிம்ஸில் எம்.பி.பி.எஸ். முடித்தார். இவர் கூறும்போது, ‘திபல நிராகரிப்புகளுக்குப் பிறகு, 2021-ல் நாராயண்குடாவில் உள்ள யுஎஸ்ஏஐடி திருநங்கை கிளினிக்கில் சேர்ந்தேன். தனது அடையாளத்தைப் பார்த்து நோயாளிகள் வரத் தயங்குகின்றனர். நோயாளிகள் எங்களை பாகுபாட்டுடன் பார்க்கின்றனர். ’ என்று கூறினார்.இதுபற்றி 2 பேரும் சேர்ந்து கூறுகையில், ‘‘ நோயாளிகள் எங்களிடம் பாகுபாடு காட்டலாம். ஆனால் அவர்களுக்கு நாங்கள் சிகிச்சை அளிப்பதன் மூலம் எங்களிடையே உள்ள பாகுபாடு நிச்சயமாக மாறுபடும். ’’ ரூத் மற்றும் பிராச்சி தெரிவித்தனர்.