டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதல்வர் மகளுக்கு தொடர்பு; அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்

புதுடெல்லி: டெல்லி புதிய கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதல்வர் மகளுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. டெல்லியில் புதிய  கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறது. சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத  பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து சோதனையை நடத்தினர். முறைகேடு வழக்கில் முக்கிய நபராக  கருதப்படும் சிசோடியா பெயர் சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த முதல்  குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், புதிய கலால் கொள்கையில் நடந்த சட்டவிரோத  பணபரிமாற்றம் குறித்த அறிக்கை ஒன்றை விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  நேற்று சமர்பித்தது.

அதில், புதிய கலால் கொள்கை மூலம்  விஜய் நாயர்,  தொழிலதிபர்கள் சிலர் மற்றும் தென் மாநிலங்களை சேர்ந்த சரத் ரெட்டி,  கே.கவிதா (சந்திரசேகரராவின் மகள்), மகுண்டா சீனிவாசலு ரெட்டி ஆகியோர்  இணைந்து சுமார் 100 கோடி அளவிற்கு சட்டவிரோத பணபரிமாற்றத்தில்   ஈடுபட்டுள்ளனர்.   அமித் அரோரா கொடுத்த  வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் சந்திரசேகரராவின் மகள் கே.கவிதாவின்  பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.  இவ்வாறு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  கூறியுள்ளது. கே.கவிதா மீது அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டை பதிவு  செய்துள்ளதால், அவர் விரைவில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: