ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மனைவியின் பெயரில் போட்ட இன்சுரன்ஸ் பணம் ரூ.1.90 கோடியை பெறுவதற்கு திட்டம் தீட்டிய கணவன் கூலி படை வைத்து மனைவியை கார் ஏற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவர் 2015ம் ஆண்டு ஷாலு தேவி என்பரை திருமணம் செய்து ெகாண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணமான இரண்டு ஆண்டுகளுக்கு பின் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷாலு தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் 2019ம் ஆண்டு கணவர் மீது ஷாலு குடும்ப வன்முறை புகாரும் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி தனது சகோதரர் ராஜூவுடன் பைக்கில் அனுமன் கோயிலுக்கு ெசன்றபோது பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் ஷாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த ராஜூ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை விபத்து வழக்காக கருதிய நிலையில் இதில் சந்தேகம் இருப்பதாக ஷாலுவின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் மகேஷிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில், மகேஷ் கூலிப்படையை ஏவி மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். மனைவி மீது மகேஷ் காப்பீடு செய்திருந்தார். காப்பீடு செய்து ஒரு ஆண்டு ஆகிவிட்டதால் ஷாலு இயற்கை மரணம் அடைந்தால் ரூ.1கோடியும், விபத்தில் இறந்தால் ரூ.1.90 கோடியும் இன்சூரன்ஸ் தொகையாக கிடைக்கும். எனவே மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ரூ.10லட்சம் கொடுத்து கூலிப்படையை வைத்துள்ளார். அவர்களுக்கு ரூ.5.5லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். அதே நேரம் ஷாலுவிடம் தான் ஒன்று நினைத்துள்ளதாகவும் இது நிறைவேறினால் அவரை வீட்டிற்கு அழைத்துவந்துவிடுவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக 11 நாட்கள் தொடர்ந்து அனுமன் கோயிலுக்கு செல்லும்படியும், இதனை யாரிடமும் கூறவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். வேண்டுதலுக்காக ஷாலு கோயிலுக்கு செல்லும்போது கூலிபடையினர் விபத்து ஏற்படுத்தி அவரை கொலை செய்தாக மகேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.