செல்போனில் வீடியோ பதிவு செய்தபடி 114 கி.மீ. வேகத்தில் பைக் ஓட்டிய 2 மாணவர்கள் பரிதாப பலி; தரமணியில் சோகம்

வேளச்சேரி: தரமணியில் செல்போனில் வீடியோ பதிவு செய்தபடி 114 கி.மீ. வேகத்தில் பைக் ஓட்டிய 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் வாலிபர்கள் பைக்கில் அதிவேகத்தில் பயணம் செய்து விபத்துக்களில் சிக்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் சாகச வீடியோ பதிவிட்டு, அதிக லைக்குகளை பெற பலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், பைக்கை அதிவேகத்தில் ஓட்டிசென்று அதனை செல்போனில்  படம் பிடித்த மாணவர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது. தரமணி தந்தை பெரியார் நகர் பகுதியை  சேர்ந்தவர் பிரவின் (19). இவர், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம்  2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஹரி (17). இவர், வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

விலை உயர்ந்த பைக் வைத்துள்ள பிரவீன், அதிவேகமாக அதனை இயக்கி வந்துள்ளார். இந்நிலையில், பரவீன் கடந்த 2 நாட்களுக்கு முன், தனது பைக்கில், நண்பன் ஹரியுடன் தரமணி 100 அடி சாலையில் அதிவேகத்தில் சென்றுள்ளார். அப்போது, இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட நினைத்துள்ளனர். இதையடுத்து, பைக்கை 114 கிலோ மீட்டர் வேகம் வரை பிரவீன் ஓட்டியுள்ளார்.  இதனை பின்னால் அமர்ந்து இருந்த ஹரி தனது செல்போனில், எவ்வளவு வேகத்தில்  செல்கிறோம் என்பதை வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தார். வீடியோவுக்கு போஸ் கொடுக்க அதில் கவனம் செலுத்தியுள்ளனர். அப்போது, தரமணி  சந்திப்பு அருகே எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த ஒரு சரக்கு வாகனம் திரும்ப முயன்றது. இதை பார்த்த பிரவீன் பைக்கை திருப்ப முயன்றுள்ளார். அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பைக் பிரவீன் மற்றும் ஹரியுயுடன் கீழே விழுந்து, இருவரும் பைக்குடன் சறுக்கியபடி பல அடி தூரத்துக்கு இழுத்து  செல்லப்பட்டனர். இதில், இருவரும் படுகாயமடைந்தனர்.

இதனை  பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள், உயிருக்கு போராடிய 2  பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். ஹரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி  ஹரியும் பரிதாபமாக இறந்தார்.

இந்த  விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகத்தில் பைக்கில் செல்ல ஆசைப்பட்டு மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் நண்பர்கள்  மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: