×

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த திருச்சி வியாபாரி வீட்டில் சிபிஐ ரெய்டு: கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக திடுக் தகவல்

திருச்சி: பெண் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்த மணப்பாறை வியாபாரி ராஜா வீட்டில் நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை பூமாலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவரது மகன் ராஜா(45). விவசாயியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில், சில ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார்.

பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர், திருப்பூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பலவிதமான வெப்சைட்டுகளுக்கு விற்பனை செய்து அதன்மூலம் பல கோடி சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் மத்திய உளவுப்பிரிவுக்கு தெரியவந்தது. அவர்கள் இதுபற்றிய தகவல்களை சிபிஐக்கு தெரிவித்தனர். இந்நிலையில், ராஜாவின் இணையதள முகவரி மற்றும் அவர் விற்பனை செய்தள வெப்சைட்டுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

இதில் ராஜா, பெண் குழந்தைகளின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜா வீட்டில் சோதனை நடத்த சிபிஐ அதிகாரிகள் (அயல்நாடு செயல்பிரிவு அதிகாரிகள்) முடிவு செய்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். இதை தொடர்ந்து திருச்சி மாவட்டம், மணப்பாறை பூமாலைப்பட்டியில் உள்ள ராஜா வீட்டுக்கு நேற்று காலை 6 மணியளவில் 4பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அவரது செல்போன், லேப்டாப் மற்றும் லக்ட்ரானிக் உபகரணங்களை கைப்பற்றினர். இரவு 8 மணி வரை சோதனை நடந்தது. இது குறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ இளம் சிறார்களின் ஆபாச படங்கள், வீடியோக்களை மொபைல் செயலி மூலம் வெளிநாடுகளில் உள்ள வெப்சைட்டுகளுக்கு விற்பனை செய்து ராஜா பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்தது. இதில் அவருக்கு உடந்தையாக இருந்தது யார், ஏஜென்டாக இருந்தது யார் என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இச்சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சொகுசு வாழ்க்கை
திருப்பூரில் இருந்து துணிகளை கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ராஜா ஏற்றுமதி செய்து வந்துள்ளார். இதில், வெளிநாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் நட்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி அவர்களுக்கு முதலில் இளம் சிறார்களின் ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளாராம். இதற்காக லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார்களாம். இதனால் திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்தவாறே இளம்சிறார்களின் புகைப்படம், வீடியோக்களை விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். இதன்மூலம் ராஜா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளாராம்.

* ஆபாச வீடியோ எப்படி கிடைத்தது?
ராஜாவுக்கு இளம் சிறார்களின் ஆபாச வீடியோக்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். வேறுபகுதியில் சிறார்களின் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டு, அந்த வீடியோக்களை ராஜா வெளிநாட்டை சேர்ந்த இணையத்தில் விற்பனை செய்தாரா?, கும்பலுடன் சேர்ந்து இந்த வேலையில் ராஜா இறங்கினாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மற்றும் மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மாயமான இளம்சிறார்களை வைத்து ஆபாச வீடியோக்களை ராஜா எடுத்தாரா? என்று அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

* அதிகாரிகள் அதிர்ச்சி
ராஜாவின் வீட்டில் நேற்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவரது செல்போன், லேப்டாப் மற்றும் கணினி, ஹார்டு டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்டவைகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், இளம் சிறார்களின் ஆபாச வீடியோக்கள் பெருமளவில் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜா மிகப்பெரிய நெட்வொர்க்குடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

Tags : CBI ,Trichy , CBI raids house of Trichy businessman who sold child porn videos to foreign countries: Shocking information that he earned crores
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...