புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு புதிய யானையை அரசு வாங்காது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி பக்தர்களின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமி நேற்று முன்தினம் காலை நடைபயணம் மேற்கொண்டபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியபின், உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகரின் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் லட்சுமி யானை இருந்து வந்தது. அதன் மறைவுக்கு பிறகு கோயிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மணக்குள விநாயர் கோயிலுக்கு புதிய யானையை அரசு வாங்காது என முதல்வர் ரங்கசாமி நேற்று நடந்த விழாவில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.