மதுரையில் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்குமாறு வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரையில் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தை விரைந்து அமைக்கக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசு செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை புதுமாகாளிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை (நைபர்) மதுரையில் அமைப்பது தொடர்பாக 8வது நிதி ஆணையம் கடந்த 20.1.2011ல் பரிந்துரைத்தது. இதன்படி மதுரை கிழக்கு தாலுகா திருமோகூர் பகுதியில் 116 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக ஒதுக்கியது. நிலம் ஒதுக்கி 11 ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை எந்தப் பணியும் நடக்கவில்லை. மதுரையில் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை விரைந்து அமைக்க நடவடிக்கையை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய உரம் மற்றும் ரசாயனத்துறை மருந்து பிரிவு செயலர், நிதித்துறை முதன்மை செயலர், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: