சென்னை: நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்க கடத்த முயன்ற 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோக திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 21.11.2022 முதல் 27.11.2022 வரையிலான ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.11,73,395 மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோக திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 87 லிட்டர், 72 எரிவாயு உருளை, துவரம் பருப்பு 3520 கிலோ ஆகியவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.