சென்னை: தமிழகத்தில் ரேஷன் அரிசியை கடத்திய 52 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 21.11.2022 முதல் 27.11.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற பதினொறு இலட்சத்து எழுபத்து மூன்றாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து ரூபாய் மதிப்புள்ள, 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், மண்ணெண்ணெய் 87 லிட்டர், 72 எரிவாயு உருளை, துவரம் பருப்பு 3520 கிலோ ஆகியவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றச் செயலில் ஈடுபட்ட 191 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 02 நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980ன்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.