30ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் ரூ.7.20 கோடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை: வேப்பாடி ஆறு ஆணைமடுவு அணை திட்டத்திற்கு பரிந்துரை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 30ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், வேப்பாடி ஆறு ஆணைமடுவு அணைக்கட்டு திட்டத்தை அரசு நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறது. முதல் கட்டமாக ரூ.7.20 கோடியில் தடுப்பணை கட்டி, அதிலிருந்து நீர் பம்பிங் செய்து 9 ஏரிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில், ஏற்காடு மலையின் அடிவாரத்தில் மாவட்ட எல்லையில் ஆணைமடுவு என்ற இடம் அமைந்துள்ளது.

ஏற்காடு மலைகளில் பெய்யும் மழைநீர் மற்றும் மலைகளில் உருவாகும் ஊற்று நீரை அடிப்படையாக கொண்டு உருவாகும் வேப்பாடி ஆறு, ஆணைமடுவு பகுதியில் தேங்குகிறது. பின்னர் பொம்மிடி, தொப்பையாறு வழியாக ஓடி, இறுதியாக மேட்டூர் அணையில் சேர்கிறது. ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ள ஆணைமடுவு பகுதியில், ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சிறிய தடுப்பணை கட்டப்பட்டது.

இந்நிலையில், ஆணைமடுவு பகுதியில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், தர்மபுரி ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மக்கள் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த 2004ம் ஆண்டு, அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு 18 ஆண்டுகளை கடந்தும், இங்கு அணை கட்டுவதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இங்கு அணை கட்டப்பட்டால் பொம்மிடி, பில்பருத்தி, துறிஞ்சிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசி கவுண்டனூர், கேத்துரெட்டிபட்டி, சிந்தல்பாடி, ஜாலியூர், ரேகடஅள்ளி, மணிபுரம், கடத்தூர், மொரப்பூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டம் ஏற்காடு மலையின் பின்பகுதியில், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அமைந்துள்ளது. இங்கு மலை அடிவாரத்தில் ஆணைமடுவு என்ற இடத்தில், ஏற்காடு மலை பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், குளம் போல தேங்கி நின்று, வேப்பாடி ஆற்றில் கலந்து ஓடுகிறது. ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ள ஆணைமடுவு பகுதியில், இயற்கையாகவே அணை கட்டுவதற்கான சூழல் உள்ளது. இங்கு அணை கட்டப்பட்டால், 50க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களில் கால்வாய்கள் மூலம் உபரி நீரை நிரப்ப முடியும். இதன் மூலம் மொரப்பூர் அருகே உள்ள நவலை கிராமம் வரை, சுமார் 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த முடியும்.

இதன் மூலம் இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இத்திட்டத்தை நிறைவேற்ற ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு மேற்கொள்ளபட்டு, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால், அப்போது நிதி இல்லாத காரணத்தால், அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எனவே, இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், ‘வேப்பாடி ஆறு ஆணைமடுவு திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக வேப்பாடி ஆறு ஆணைமடுவு பகுதியில் நீர் வரும் இடத்தில், ₹7.20 கோடியில் ஒரு தடுப்பணை கட்டி, அதிலிருந்து நீர் பம்பிங் செய்து 9 ஏரிகளுக்கு கொண்டு செல்ல முதல்கட்டமாக நடவடிக்கை எடுத்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி ஆதாரம் கிடைத்தவுடன், தடுப்பணை கட்டப்படும்,’ என்றனர்.

Related Stories: