தண்டையார்பேட்டை: ஓடும் பஸ்சில் ஏறியதை கண்டித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பெரம்பூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்குள்ளேயே நடத்துனரும், இளம்பெண்ணும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் அனிதா (30). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரம்பூர் செல்வதற்காக பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி வந்த மாநகர பேருந்தில் (த.எண் 42 ஏ) ஓடிச்சென்று ஏறி உள்ளார். உடனே, பேருந்தின் நடத்துனர் செல்வகுமார் (42), ஓடும் பஸ்சில் ஏறுவதை கண்டித்து, தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பூர் பேருந்து நிலையம் சென்றவுடன் பேருந்தில் இருந்து இறங்கும்போது அனிதா ஆத்திரம் தாங்காமல் நடத்துனர் செல்வகுமாரிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த அவர் நடத்துனரை அடித்துள்ளார். பதிலுக்கு அவரும் அனிதாவை தாக்கியுள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்ட சம்பவம் குறித்து பேருந்து பயணிகள் செம்பியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். இருவரும் மாறி மாறி புகார் அளித்தனர். இதுகுறித்து, செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் விசாரணை நடத்தி வருகிறார். பேருந்தில் இருந்த பயணி ஒருவர், நடத்துனரும், இளம்பெண்ணும் மாறி மாறி தாக்கிக் கொள்வதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.