தொற்றுநோய் மருத்துவமனையில் மாணவிகளுக்கு செவிலியர் பயிற்சி: மாநகராட்சி அழைப்பு

சென்னை: தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2022-23ம் ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். உதவி செவிலியர் பயிற்சி பெற 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி, ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர் (பொ) தொ.நோ.ம.மனை.எண்.187 திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் வரும் 5ம்தேதி முதல் 11ம்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 12ம்தேதி. அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் பெறப்படும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: