பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார்: கல்விதுறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை..!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக பெற்றோர் அளித்த புகார் குறித்து கல்விதுறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். துடுப்பதி அருகே பாலக்கரை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பாலக்கரை, கூலிக்காட்டு வலசு, இந்திராநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அந்த பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பட்டியலின மாணவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கழிவறைகளை சுத்தப்படுத்த வைத்ததாக புகார் எழுந்தது. கிருமி நாசினியை வெறும் கையால் பயன்படுத்திய போது மாணவர்களின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பெற்றோர் விசாரித்த போது சிறுவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் கொடுமை தொடர்ந்ததால் பெற்றோரும், சமூகநல ஆர்வலர்களும் காவல்துறையிலும், குழந்தைகள் நல அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.

பின்னர், பள்ளியை முற்றுகையிட்ட அவர்கள் தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, பெற்றோரின் புகாரையடுத்து பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். விசாரணை அறிக்கை விரைவில் உயர்அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.      

Related Stories: