கலவை: கலவை அருகே ஆபத்தை உணராமல் நேற்று பஸ்சின் மீது அமர்ந்தும், படிக்கட்டு மற்றும் பின்பக்க ஏணியில் தொங்கியபடியும் மாணவர்கள் பயணம் செய்தனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்சின் படியில் தொடங்கிய படியும், பின்பக்க ஏணியை பிடித்தும், பஸ் மீது அமர்ந்தும் பயணம் செய்வதால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்படுகிறது.
விபத்தை தடுப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை ேமற்கொண்டு பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாக விழிப்புணர்களை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறத்தில் இருந்து மாம்பாக்கம் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் தனியார் பஸ்சில் ஆரணி-செய்யாறு சாலையில் படிக்கட்டுகளிலும், பஸ்சின் பின்பக்க ஏணியிலும் தொங்கியபடியும், பஸ்சின் மீது அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே, அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.