அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் இன்று கர்நாடகா-சவுராஷ்டிரா, மகாராஷ்டிரா-அசாம் அணிகள் மோதுகின்றன. கடந்த 12ம் தேதி தொடங்கிய இத்தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்கள் ஆலூர், கொல்கத்தா உள்பட 7 நகரங்களில் நடந்தன. நடப்பு சாம்பியன் இமாச்சல் லீக் சுற்றுடன் வெளியேற, கடந்த முறை 2வது இடம் பிடித்த தமிழ்நாடு காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சவுராஷ்டிரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் கர்நாடகா-சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் கர்நாடகா தான் விளையாடிய 7 ஆட்டங்களில் 6ல் வென்று பி பிரிவில் 24 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்றாலும், காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ஜார்கண்டை வீழ்த்திய பிறகே காலிறுதிக்குள் நுழைந்தது.