மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு போல் கன்னியாகுமரி, சுசீந்திரத்தில் நாசவேலைக்கு திட்டமா? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் 5 நாட்கள் வரை தங்கி இருந்த முகமது ஷாரிக், கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ம்தேதி, ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதற்கு காரணம் என கருதப்படும் முகமது ஷாரிக், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கோவை, மதுரைக்கு நேரடியாக சென்று மங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நாகர்கோவிலுக்கு வந்த மங்களூரு இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர், மீனாட்சிபுரத்தில் உள்ள லாட்ஜில், முகமது ஷாரிக் தங்கி இருந்தது கண்டுப்பிடித்தனர்.  அறையில் இருந்து காலையில் வெளியே செல்லும் அவர் இரவில் தான் திரும்பி வந்திருக்கிறார். கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில் குறித்து கேட்டதோடு, அங்கு வழிபட செல்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில்களுக்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், கோயில்களுக்கு உள்ளே செல்லாமல் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளை அவர் நோட்டமிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக வீடியோ காட்சிகள் எதுவும் உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் நாகர்கோவிலில் இருந்து 12ம்தேதி இரவு, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருவனந்தபுரம் சென்றுள்ளார். எனவே நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் மங்களூரு போலீசார் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளை நோட்டமிட்டது ஏன் என்பதும் மர்மமாக உள்ளது. கன்னியாகுமரியில் நவம்பர் முதல் ஜனவரி வரை சீசன் கால கட்டமாகும். அப்போது லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருவார்கள்.

அவர்கள், சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலைய சுவாமி கோயிலுக்கும் செல்வது வழக்கம். எனவே இந்த சமயங்களில் நாசவேலைக்காக திட்டமிட்டு முகமது ஷாரிக் கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிக்கு சென்று இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தற்போது கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

* ஆன்லைன் மூலம் கார்களை வாடகைக்கு எடுத்து விற்றவர் கைது

திருவனந்தபுரத்தில் ஆன்லைன்  மூலம் கார்களை வாடகைக்கு கொடுக்கும் நிறுவனத்திடமிருந்து கார்களை வாடகைக்கு எடுத்த கும்பல் பின்னர் அந்தக் கார்களை திரும்ப ஒப்படைக்கவில்லை. இது குறித்து அந்த நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில் திருவனந்தபுரம் வஞ்சியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், கார்களை வாடகைக்கு எடுத்து உதிரிபாகங்களை பிரித்து விற்றது தெரியவந்தது. திருச்சூர் அருகே வாடானப்பள்ளி பகுதியை சேர்ந்த  இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகமது ரபீக்கிற்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வஞ்சியூர் போலீசார் கோவை விரைந்து சென்று முகமது ரபீக்கை கைது  செய்தனர். விசாரணையில் இவர், தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்  என்றும் தெரியவந்தது.

* அசாம் வாலிபரிடம் விசாரணை

ஷாரிக்கை நாகர்கோவிலில் இருந்து பாஸ்ட்புட் கடை பணியாளர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு இருந்தார். விசாரணையில் அந்த வாலிபர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அந்த வாலிபரிடம் சுமார் 30 மணி நேரம் குமரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்திவிட்டு விடுவித்தனர். அவரிடமும் மங்களூர் போலீசார் நேற்று விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

Related Stories: