நடிகர் தனுஷிற்கு எதிரான வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: நடிகர் தனுஷிற்கு எதிரான வழக்கு தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷை தங்களது மகன் என உரிமை கோரி, மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனுஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மேலூர் நீதிமன்றத்திலுள்ள வழக்கை ரத்து செய்தது. ‘‘இந்த வழக்கில் தனுஷ் தனது கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறி கதிரேசன், மதுரை ஜேஎம் 6ம் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கதிரேசனின் குற்றச்சாட்டில் போதுமான முகாந்திரம் இல்லையெனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு செய்துள்ளார்.

அதில், ‘‘தனுஷ் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையை அறியும் விதம் குறித்து சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. இதன் மீதான முடிவு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை. இதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, முறையாக விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் குறிப்பிடும் வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை ஜேஎம் 6 நீதிமன்றம், இங்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 13க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: