சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் மற்றும் நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் நடைபெற்றது. இந்த விசரணையின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு, சித்தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டது எனவும் வாதிட்டார்கள். அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி மத்திய தணிக்கை துறை அறிக்கையில் டெண்டர்கள் குறைந்த விலையில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் சார்பாக வழக்கறிஞர் ஆர்.சுரேஷ் ஆஜராகி ஒரே ஐபி முகவரில், ஒரே இடத்தில் இருந்து டெண்டர்களை முன்னாள் அமைச்சருக்கு நெருங்கியவர்கள் விண்ணப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், 47 ஒப்பந்தங்கள் முன்னாள் அமைச்சரின் சகோதரர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தங்கள் ஒதுக்கியத்தில் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு உள்ளது என்றும், வேலுமணியின் பினாமியான ராஜன் சந்திரசேகருக்கு ரூ.100 கோடி அளவுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், நாளை மதியம் 2.30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகின்றனர்.