தென்மாவட்டங்களில் முதன்முறையாக வல்லநாடு வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி திருவிழா: இன்றும், நாளையும் நடக்கிறது

நெல்லை: தென்மாவட்டங்களில் முதன்முறையாக பாளையை அடுத்த வல்லநாடு வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி திருவிழா, இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி பல்வேறு போட்டிகளும் நடக்கிறது. இயற்கை  தந்த அழகுகளில் வண்ணத்துப் பூச்சிகளும் ஒன்று. அதுவும் கூட்டமாக பறக்கும்  வண்ணத்துப் பூச்சிகளையும், மலர்களை சுற்றி வரும்போது இறக்கை அழகும், தேன் உண்ணும்  காட்சியும் கண்களுக்கு குளுமையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும். அவற்றின்  இயற்கை வர்ணங்கள் கற்பனை செய்ய முடியாத காட்சியாக இருக்கிறது.

பட்டாம்பூச்சி என்றழைக்கப்படும் இந்த வண்ணத்துப் பூச்சிகள்  அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்றன. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் வகை வண்ணத்துப் பூச்சி இனங்கள் உள்ளன. இந்த வண்ணத்துப் பூச்சிகள் ஒரு சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. பட்டாம்பூச்சியின் சராசரி ஆயுட்காலம் சுமார் மூன்றிலிருந்து நான்கு வாரங்கள். வண்ணத்துப்பூச்சியின் மொத்த வாழ்க்கை சுழற்சியும் 2 லிருந்து 8 மாதங்கள் வரை நீடிக்கும். ஒரு பட்டாம் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி, முதலில் முட்டை அதன் பிறகு கம்பளிப்பூச்சி அதன் பிறகு கூட்டுப்புழு அதன் பிறகு வயது வந்த பட்டாம்பூச்சி என நான்கு நிலைகளில் இருக்கும்.

சுமார் இருபத்தி நான்கு மணி நேரம் மட்டுமே வாழக்கூடிய பட்டாம்பூச்சி இனமும் உள்ளது. அது போல ஒன்பது மாதங்கள் வரை உயிர் வாழக் கூடிய பட்டாம்பூச்சிகளும் உள்ளது. பிரிம்ஸ்டோன் பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சிகளில் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டது. இது ஒன்பதிலிருந்து பத்து மாதங்கள் உயிர் வாழ்கிறது. மிகப்பெரிய பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்று ஜெயண்ட் ஸ்வாலோடெயில் பட்டாம்பூச்சி. இந்த பட்டாம்பூச்சியின் இறக்கைகள் நான்கிலிருந்து ஏழு அங்குலங்கள் வரை விரிவடைந்து காணப்படும். வண்ணத்துப் பூச்சிகள் சிறிய அளவில் எட்டில் ஒரு பங்கு அங்குலத்தில் இருந்து கிட்டத்தட்ட 12 அங்குலம் வரை இருக்கும்.

வண்ணத்துப்பூச்சிகள் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. 3,200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. மோனார்க் பட்டாம்பூச்சிகள் கிரேட் லேக்ஸிலிருந்து மெக்சிகோ வளைகுடாவிற்கு சுமார் 3,200 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து வசந்த காலத்தில் மீண்டும் வடக்கே திரும்புகின்றன. குளிரில் இருந்து தப்பிக்க வெப்பமான காலநிலையைத்தேடி இந்த பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்கிறது.

பட்டாம்பூச்சிகள் பறப்பதற்கு வெப்பம் தேவை.

குளிர்ச்சியாக இருந்தால் பட்டாம்பூச்சிகளால் பறக்க முடியாது. வண்ணத்துப் பூச்சிகளின் உடல் வெப்பநிலை 86 டிகிரிக்கு குறைவாக இருந்தால் வண்ணத்துப்பூச்சிகளால் பறக்க முடியாது. வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதற்கு ஏற்ற வகையில் சிறகுகளை வெப்பமாக்குவதற்கு சூரிய ஒளியில் ஓய்வெடுக்கும். மிகவும் குளிராக இருந்தால் வண்ணத்துப்பூச்சி அசையாமல் ஓரிடத்தில் அப்படியே இருக்கும். 3,500 ஆண்டுகள் பழமையான தீப்ஸில்(Thebes) உள்ள எகிப்திய ஓவியங்களில் பட்டாம்பூச்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு சில வண்ணத்துப் பூச்சிகளுக்கு சாப்பிடுவதற்கு வாய் இருக்காது. இந்த வண்ணத்துப் பூச்சிகள் கம்பளி பூச்சிகளாக இருக்கும் பொழுது சேமித்து வைத்திருக்க கூடிய ஆற்றலில் உயிர் வாழ்கிறது. பட்டாம்பூச்சிகள் முட்டைகளை செடிகளின் இலைகளில் போடும். இப்படி பட்டாம்பூச்சிகள் செடிகளில் முட்டை இடுவதற்கு முன்பு அதன் கால்களால் இலைகளை ருசி பார்த்து அந்த இலைகள் கம்பளிப் பூச்சிகள் வளரும் பொழுது அதற்கு உணவளிக்க அந்த இலைகள் போதுமானதாக இருக்குமா என்பதை பார்த்து அதன் பிறகு முட்டை இடுகிறது.

கம்பளி பூச்சிகள் சாப்பிடாத செடிகளில் உள்ள இலைகளில் பட்டாம்பூச்சிகள் முட்டையிடாது. உலகின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி பெண் ராணி அலெக்ஸாண்ட்ரா பேர்ட்விங். இதன் இறக்கைகள் 25 சென்டிமீட்டர் இருக்கும். மிகச்சிறிய பட்டாம்பூச்சி வெஸ்டர்ன் ப்ளூ பிக்மி ஆகும். இது 2 சென்டிமீட்டர் குறுக்களவு கொண்டது. பல வளர்ந்த வண்ணத்துப்பூச்சி இனங்கள் தங்கள் கழிவுகளை வெளியேற்றுவது இல்லை. வண்ணத்துப்பூச்சிகள் சாப்பிடக்கூடிய எல்லாவற்றையும் ஆற்றலாக மாற்றி பயன்படுத்துகிறது. ஒரு சில வகை பட்டாம்பூச்சிகள் விலங்குகளின் காயங்களில் இருந்து வரக்கூடிய ரத்தத்தை குடிக்கின்றன.

வண்ணத்துப்பூச்சிகள் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வண்ணத்துப்பூச்சிகளின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிக்காக சில நாடுகளில்  குறிப்பிட்ட  நாட்களில் விழா கொண்டாடி கண்டு மகிழ்கின்றனர். இந்த வரிசையில்  இப்போது தென்மாவட்டங்களில் முதன்முறையாக  வண்ணத்துப்பூச்சி விழா கொண்டாடி  மகிழ வாய்ப்பு  கிடைத்துள்ளது.  வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை சூழல்,  அவற்றின்  சூழலியல் பங்கு, மனிதனுக்கு வண்ணத்துப்பூச்சிகள் தரும் பயன்கள்  போன்றவைகளை  விளக்கும் வகையில் வண்ணத்துப்பூச்சி திருவிழா இன்றும்,  நாளையும் வல்லநாடு அருகே முருகன்புரம் விலக்கு வனப்பகுதியை ஒட்டிய வேளாண்மை  தொழில் முனைவோர்  மேம்பாட்டு மையத்தில் நடக்கிறது. இன்று காலை 9 மணிக்கு  இந்த விழாவை கனிமொழி எம்பி தொடங்கி வைக்கிறார்.  

அமைச்சர்கள்  கீதாஜீவன்,  அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி,  தூத்துக்குடி  மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.   வண்ணத்துப்பூச்சிகளை பார்வையிடல், புகைப்பட கண்காட்சி, சித்திரம் வரைதல்,   சூழல் விளையாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

Related Stories: