திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் என்ற பெயருக்கு பதிலாக எழுதப்பட்டிருந்த இந்தி பெயர் அகற்றம்.! எதிர்ப்பு எழுந்த நிலையில் நடவடிக்கை

திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் என்ற பெயருக்கு பதிலாக எழுதப்பட்டிருந்த இந்தி பெயர் அகற்றப்படுள்ளது. சகயோக் என்று இந்தி எழுத்தால் எழுதி ஒட்டப்பட்டு இருந்த பெயர் பலகை அகற்றப்பட்டது. இந்தியில் இருந்த பலகைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததை அடுத்து ரயில்வே அதிகாரிகள் பலகையை அகற்றினர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு சேவை மையத்தில் தமிழ் மொழியில் சேவை மையம் என பெயர்ப்பலகை எழுதப்பட்டு இருந்தது.

அதுபோல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அந்தப்பெயர் மொழி பெயர்க்கப்பட்டு ஒன்றின் கீழ், ஒன்றாக எழுதப்பட்டு இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் என்று பெயர்ப்பலகையில் இந்தி எழுத்தால் சகயோக் என பெரிதாக எழுதி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் இன்பர்மேசன் சென்டர் என்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்தால் சகயோக் எனவும் தமிழில் சேவை மையம் என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தால் சகயோக் என்றும் எழுதப்பட்டுள்ளது.

இதை எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் சகயோக் என்றுதான் வாசிக்க முடியும். இதே போன்று இந்த சேவை மையத்தின் அருகில் காசி சங்கமம் என்ற பெரிய விளம்பரப் பதாகையில் அனைத்தும் இந்தி மொழியில் பெரிதாக எழுதப்பட்டு ஒரே ஒரு வாசகம் மட்டும் தமிழ் எழுத்தில் மிகவும் சிறியதாக எழுதப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன? தமிழ் மறைப்பா? இந்தி திணிப்பா? யாருக்கும் புரியவில்லை. பயணிகள் குழம்பி போய் நின்றார்கள். இந்நிலையில் இந்தியில் இருந்த பலகைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததை அடுத்து ரயில்வே அதிகாரிகள் பலகையை அகற்றினர்.

Related Stories: