சென்னை ஏர்போர்ட்டில் நெரிசலை குறைக்க சர்வதேச, உள்நாட்டு முனையங்களுக்கு செல்ல தனித்தனி வழிகள்; வாகன கட்டண வசூலுக்கு கூடுதல் கவுன்டர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில், வாகன போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு தனித்தனி வழிகளும், வாகனங்களின் கட்டண வசூலுக்கு கூடுதல் கவுன்டர்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாடு கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏற்கனவே கொரோனா காலத்துக்கு முன்பு 2018ல் நாளொன்றுக்கு சுமார் 8,000 வாகனங்கள் வந்து சென்றன. தற்போது சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

சென்னை சர்வதேச முனையம், உள்நாட்டு முனையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஒரே பகுதி வழியாக வந்து விட்டு வெளியேறுவதால் வாகனங்களின் கட்டணம் வசூலிக்கும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதனால் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உள்நாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் ஒரு வழியாக வந்து விட்டு மற்றொரு வழியாக திரும்புவதற்கும், சர்வதேச விமான நிலையத்துக்கு வாகனங்கள் வந்து விட்டு வெளியே செல்வதற்காகவும் புதிதாக வழிகள் அமைக்கப்படுகின்றன. மேலும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதற்காக கவுன்டர்களும் கூடுதலாக தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச முனையத்தில் இரவு நேரங்களிலும், அதிகாலைகளிலும் ஏற்படும் நெரிசல் இனிமேல் இருக்காது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: