மக்கள் போராட்டம் தொடர்ந்தாலும் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது: வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டம்

பீஜிங்: ``சீனாவில் போராட்டம் தொடர்ந்தாலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது,’’ என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தி உள்ளார். சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து ஜின்பிங் தலைமையிலான அரசு அங்கு கடும் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் உரும்கி நகரில் ஊடரங்கு கட்டுப்பாட்டினால் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை விரைவில் அணைக்க முடியாமல் 10 பேர் பலியாகினர்.

இதனால் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு எதிராக உரும்கியில் தொடங்கிய போராட்டம் பீஜிங், ஷாங்காய், குவாங்ஜோ உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. ஜின்பிங் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், ``சமூக வலைதளங்களில் தீ விபத்தை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டுடன் தொடர்பு படுத்தி சில விஷமிகள் உள்நோக்கத்துடன் தவறான செய்தி பரப்பி வருகின்றனர். ஆனால் போராட்டங்கள் எவ்வளவு தீவிரமடைந்தாலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: