சென்னையில் கடந்த 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாமில் 61 ஆயிரம் பேர் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கடந்த 4 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 1.1.2023 தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல்  மூலம் மொத்தம் 38 லட்சத்து 92 ஆயிரத்து 457 வாக்காளர்கள் இருப்பதாகவும்,அதில் ஆண்கள் 19,15611 பேர்,பெண்கள் 19,75788 பேர் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

மேலும்,வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடந்த 12, 13-ம் தேதி முதல் கட்டமாகவும் 26, 27 ஆகிய தேதிகளில் 2 ம் கட்டமாகவும் தமிழகம் முழுவதும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றன. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயர் உள்ளதா என சரி பார்த்துக்கொள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது பெயர்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என சரிபார்த்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும் ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் மாறியவர்கள் திருத்தம், இறந்தவர்கள் மற்றும் 2 இடங்களில் பெயர்கள் உள்ளவர்கள் நீக்கம் செய்யவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3723 வாக்குசாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு சென்று நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர்களை சேர்த்தனர். அதில் புதிய வாக்காளர்களுக்கான  விண்ணப்பங்களை மட்டும்  42,707  பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயரை திருத்துதல்,புகைப்படத்தை மாற்றுதல்,முகவரியை மாற்றுதல் போன்ற ஒட்டுமொத்த திருத்த பணிகளுக்கு 61,759 பேர் மனுக்களை வழங்கியுள்ளனர்.

Related Stories: