ஜீவா ரயில் நிலையத்தில் பைக் திருடிய 2 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளுவர் மாவட்டம், சுப்பிரமணி பரதேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (38). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தினமும் திருவள்ளூரில் இருந்து ரயில் மூலம் ஜீவா ரயில் நிலையம் வந்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக்கை எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோன்று, கடந்த 25ம்தேதி தனது பைக்கை ஜீவா ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு ரயில் மூலம் வீட்டிற்கு சென்றார். மறுநாள் வேலைக்கு செல்வதற்காக ரயில் மூலம் மீண்டும் ஜீவா ரயில் நிலையத்திற்கு வந்து தனது பைக்கை எடுக்க சென்றார். அப்போது, தனது பைக் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஓட்டேரி பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் பைக்கை திருடி செல்வது கண்டுபிடித்தனர். இதனையடுத்து, புளியந்தோப்பு கேஎம் கார்டன் பகுதியை சேர்ந்த விஜய் (22) மற்றும் அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த எடிசன் (21) ஆகிய 2 பேரையும் ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: