சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை ஆப்பிரிக்க குரங்கு குட்டிகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது நஸ்ருதீன் (28) என்ற பயணி 2 பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்தார். சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனையிட்டபோது, பிளாஸ்டிக் கூடைகளுக்குள், அபூர்வ வகை குரங்கினமான பிக்கி மர்மொசெட் மற்றும் டஸ்கி லீப் வகையைச் சேர்ந்த நான்கு குரங்கு குட்டிகள் இருந்தன. இவை ஆப்ரிக்க நாட்டு காட்டுப்பகுதிகளில் வசிப்பவை.