இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இன்று 23 தமிழக மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவ சமூகத்தினரிடையே கடுமையான மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே நெருக்கடியான பொருளாதாரத்தை எதிர்கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு நமது ஆதரவு தேவைப்படுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் 105 மீன்பிடிப் படகுகள் தற்போது இலங்கை வசம் உள்ளன என்றும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர் முயற்சிகளின் காரணமாக விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இன்னும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், தற்போது இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் தேவையான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: