பிரதமர் மோடி அழைப்பை ஏற்று வருகிற 4ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்: 5ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கிறார்கள்

சென்னை: பிரதமர் மோடி அழைப்பை ஏற்று வருகிற 4ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். 5ம் தேதி ஜி-20 அமைப்பு குறித்து நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கிறார்கள். இந்தோனேசியா நாட்டின் பாலிதீவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 4ந்தேதி ஏற்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஜி-20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு ஜி-20 மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் மாநில முதல்வர்கள் கூட்டத்தை டிசம்பர் 5ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் வருகிற டிசம்பர் 4ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 4ம் தேதி இரவு டெல்லியில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5ந்தேதி ஜி-20 அமைப்பு குறித்து விளக்குவதற்காக பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்கிறார்.

கூட்டத்தை முடித்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடியை தனியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதைத்தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் சிலரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில  முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜியும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Related Stories: