கோயிலுக்கு செல்வதாக கூறி அழைத்து சென்று 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: மாப்பிள்ளை உள்பட 3 பேர் கைது

சேலம்: சேலம் அருகே கோயிலுக்கு செல்வதாக கூறி அழைத்துச்சென்று, 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், மாப்பிள்ளை உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மேச்சேரி அருகேயுள்ள  மன்னாதனூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (27). பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தெரிந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்ய திட்ட மிட்டுள்ளார். இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை, ஆறுமுகம் சகோதரி ராதிகா (30), நண்பர் சதிஷ்குமார் (25) ஆகியோர் அந்த சிறுமியை கோயிலுக்கு செல்லலாம் வா என அழைத்துள்ளனர்.

இவர்களை நம்பி சென்ற அந்த சிறுமியை, அங்குள்ள கோயிலுக்கு அழைத்து சென்று ஆறுமுகம் திடீரென தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மேச்சேரி போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தனர். குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மாப்பிள்ளை ஆறுமுகம், ராதிகா, சதிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: