நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் 100 லோடு மணல் அகற்றம்

நெல்லை: நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை சுமார் 100 லோடு மணல் அகற்றப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு ரூ.78.51 கோடி மதிப்பில் புதியதாக கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. அஸ்திவாரம் தோண்டிய போது தரமான ஆற்று மணல் டன் கணக்கில் வெளியேறியது. அதை அகற்றியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பஸ்நிலையத்தின் உள்ளே குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பணிகள் நிறைவு பெற்றன. சுமார் 75 சதவீத பணிகள் நிறைவுபெற்ற நிலையில் வழக்கு காரணமாக பணி முடிந்த பகுதிகளில் பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரமுடியாத சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் பஸ் நிலைய வளாகத்தில் குன்றுபோல் குவிக்கப்பட்டுள்ள மணலை அகற்ற ஐகோர்ட் உத்தரவின்படி வக்கீல் கமிஷனர் வேலுச்சாமி மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். மேலும் கோட்டாட்சியர் சந்திரசேகரன், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி, கனிம வளத்துறை இணை இயக்குனர் முருகானந்தம், உதவி ஆணையர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின், தாசில்தார் மாணிக்கவாசகம், சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்று பிற்பகல் 1 மணி வரை சுமார் 7 லாரிகள் மூலம் 100 லோடு மணல் அகற்றப்பட்டு வக்கீல் கமிஷனர் வேலுச்சாமி முன்னிலையில் ராமையன்பட்டி உரக்கிடங்கு பகுதியில் பாதுகாப்பாக கொட்டப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இவை தவிர வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் மணல் அள்ளும் பணியை கணக்கெடுத்தனர்.

Related Stories: