×

மரக்காணம், ஆலம்பராகோட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கக்கோரி செங்கை, விழுப்புரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

மரக்காணம்: மரக்காணம், ஆலம்பராகோட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கக்கோரி அனுமந்தையில் இரு மாவட்ட மீனவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்கள் இருக்கின்றன. இந்த மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளன. இந்த மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த இரண்டு மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை இதனால் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை புயல் மற்றும் அதிகப்படியான கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்றால் விழுப்புரம் பகுதியில் உள்ள மீனவர்கள் புதுவை, கடலூர் ஆகிய பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல வேண்டும்.

இதுபோல் செங்கல்பட்டு பகுதியில் உள்ள மீனவர்கள் சென்னை பகுதியில் உள்ள துறைமுகங்களுக்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு இந்த இரண்டு மாவட்ட மீனவர்களும் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பதற்காக எடுத்துச் செல்லும் பொழுது பல்வேறு பிரச்னைகளும், சட்ட சிக்கல்களும் உண்டாகிறது. இதன் காரணமாக இந்த மீனவர்கள் பல நேரங்களில் அவர்களது மீன்பிடி விசைப்படகுகளை கடலிலேயே நிறுத்தி விடுவது வழக்கம். இவ்வாறு கடலில் விசைப்படகுகளை நிறுத்தும் பொழுது சூறாவளி, புயல் போன்றவற்றால் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகள், மீன்பிடி சாதனங்கள் கடலிலேயே மூழ்கி அழியும் நிலை தொடர்கிறது. இது போன்ற காரணங்களால் மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

 எனவே இந்த இரண்டு மாவட்ட மீனவர்களின் நலன் கருதி மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அழகன்குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும், செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு ஆலம்பராகோட்டை அருகிலும் இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூபாய் 236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். இந்நிலையில் ஒரு சில தொண்டு நிறுவனத்தினர் தற்பொழுது மீன்பிடி துறைமுகம் அமைய உள்ள பகுதியில் கடல் ஆமைகள் ஆண்டுதோறும் முட்டை இடுவது வழக்கம். இங்கு துறைமுகம் அமைந்தால் கடல் ஆமைகள் இப்பகுதியில் முட்டையிட முடியாது. இதனால் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் குறையும்.

மேலும் இந்த மீன்பிடி துறைமுகங்களால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு உண்டாகும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளும் நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள துறைமுகப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இசிஆர் சாலையில் அனுமந்தை என்ற இடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Tags : Senkai ,Villupuram ,Marakkanam ,Alambarakottai , Sengai, Villupuram fishermen fast for establishment of fishing port at Marakkanam, Alambarakottai
× RELATED நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொழிலாளி சடலத்தை சாலையில் வைத்து மறியல்