மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்கக்கூடாது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்கக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மற்றும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். ஒட்டுமொத்தமாக 2 மனுக்களிலும், தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபான விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தென் பகுதியில் 4 மாநிலங்களில் தமிழகத்தில் தான் குறைவான நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என குறிப்பிட்டனர். அரசு தரப்பில், மதுவின் அளவு குறைவாகவும், விலை அதிகமாகவுமோ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதுவே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள், மதுவிற்பனை நேரத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் கொரோனா காலகட்டத்திலேயே பிற மாநிலங்களில் இருந்து மதுபானம் வாங்குவது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெற்றன. இது தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை மது பிரியர்கள் மாற்று வழியை யோசிக்கின்றனர் என குறிப்பிட்டார்.

அதோடு 21 வயதுக்கு கீழானவர்களுக்கு மதுவிற்பனை செய்யப்படுவதை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில், அரசு இந்த விஷயத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு பள்ளி, கல்வித்துறையிடம் ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் மற்றும் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இது தொடர்பாக அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: