வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி யில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடந்த 15ம் தேதி முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை ஆண்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடந்தது. இதில் உடற்தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர்.
இதையடுத்து நேற்று முதல் பெண் விண்ணப்பதாரர்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் தொடங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர். முதல் நாளாக நேற்று நடந்த முகாமில் பங்கேற்க நேற்று முன்தினம் காலை முதலே 3 மாநிலங்களில் இருந்து ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு உயரம் அளவீடு செய்யப்பட்டது.